ஆயிரம் கிலோமீட்டருக்கும் அதிகமான நீளத்தைக் கொண்டிருக்கிறது தமிழகத்தின் கடற்கரை. சில அளவு கோல்கள் 1076 கி.மீ. என்றும், சில 1206 என்றும் வேறுபட்டு நிற்கின்றன. சென்னை கடற்கரை மட்டும் 12 கிலோமீட்டருக்கு நீண்டிருக்கிறது. இவையெல்லாம் கடலுக்குள் அமிழ்ந்து போன தமிழக நிலப்பரப்பின் எஞ்சிய பகுதிகள். அலை கடலின் தாலாட்டில் பெருநிலப்பரப்பைத் தன்னகத்தே கொண்டிருந்தது, பண்டைய தமிழகம்.
2004 டிசம்பர் 26-ஆம் நாள் நம்மில் சிலர் நேரடியாகவும் பலர் தொலைக்காட்சிகளிலும் கண்ட சுனாமி எனும் ஆழிப்பேரலையை பழந்தமிழகம் பலமுறை கண்டிருக்கிறது. அத்தகைய ஆழிப்பேரலையில்தான் குமரிக்கண்டம் எனப் படும் லெமூரியா கண்டம் கடலடி சேர்ந்தது என்பதை வரலாற்று ஆய்வாளர்கள் பி.டு.சீனிவாசய்யர், சேசைய்யர், ராமச்சந்திர தீட்சிதர், மொழிஞாயிறு தேவநேயப்பாவாணர் உள்ளிட்டோரின் ஆய்வேடுகள் தெரிவிக்கின்றன.
ஆஸ்திரேலியாவையும் தென்னாப்பிரிக்காவையும் இணைத்த பெருநிலப்பரப்பே லெமூரியா என்றும், இச்சொல் குரங்கு மனிதர்களைக் குறிக்கும் என்றும் ஆய்வுகள் சுட்டிக் காட்டுகின்றன. இங்குதான் முதன்முதலில் மொழி தோன்றி யிருக்கக்கூடும் என்றும் ஆய்வாளர்கள் நிறுவுகின்றனர். அந்த மொழிதான் ஆதித்தமிழ் என்றும், மூவகைச் சுட்டொலிகளால் இந்த மொழி உருவானது என்றும் குறிப்பிடுகின்றனர். தமிழில் இன்றும் அ, இ, உ எனும் மூன்று சுட்டெழுத்துகள் நிலவுவதை இலக்கணத்தின் வாயிலாக அறிகிறோம்.
ஹிராட்டஸ், ஓல்டுகாம், எக்கேல், கிளேஷ்ஷர், கட்டு எலியட் ஆகியோரின் ஆய்வுகளும் கடல் கொண்ட குமரிக்கண்டத்தை விவரிக்கின்றன. இதன் மூலம் பழந்தமிழ் நிலப்பரப்பு என்பது தென்மேற்கில் கிரேக்கநாடு, மேற்கில் எகிப்து-ஆப்பிரிக்கா, வடமேற்கில் தென்னாப்பிரிக்கா, கிழக்கில் பர்மா-மலேசியா-சிங்கப்பூர், தெற்கில் நீண்ட மலைத்தொடர் எனத் தன் எல்லைகளைக் கொண்டிருந்ததாக அறியப்படுகிறது. இவை தொடர்பான ஆய்வுகள் இன்றும் தொடர்ந்து கொண்டிருக்கின்றன.
பழந்தமிழ் நிலப்பரப்பை நான்கு கடற்கோள்கள் தாக்கியிருக்கின்றன. முதல் கடற்கோள், முதல் தமிழ்ச் சங்கம் அமைத்த தென்மதுரையை இரையாக்கியதென்றும், இரண்டாவது கடற்கோள், நாகநன்னாட்டை காவு கொண்டது என்றும், மூன்றாவது கடற்கோள், இடைச்சங்கம் அமைத்த கபாடபுரத்தை விழுங்கியது என்றும் மொழி ஆய்வாளர்கள் குறிப்பிடுகின்றனர். முதல்-இடைச் சங்கங்களை வளர்த்த தென்மதுரையும், கபாடபுரமும் கடலுக்கு இரையானதால் தமிழின் தொன்மையான நூல்கள் பல அழிந்து போயின. மருத்துவம், வானியல், கணிதம், அறநெறி என ஓர் இனத்தின் அறிவுச் செல்வங்களை கடல்தாய் தன்னகத்தே கைப்பற்றிக்கொள்ள, நிலத்தோடு சேர்த்து பல சிந்தனை வளங்களின் குவியலையும் இழந்தாள், தமிழ்த்தாய். இன்று தமிழர்களிடம் உள்ள பழந்தமிழ் இலக்கியங்களெல்லாம் கடைச்சங்கம் அமைந்திருந்த இன்றைய மதுரையிலிருந்தும் சங்கம் மருவிய காலத்திற்குப் பிறகு, தமிழகத்தில் எழுதப்பட்ட இலக்கியங்களுமேயாகும் என்கின்றனர், புலவர் பெருமக்கள்.
அன்றைய தமிழகத்தைத் தாக்கிய நான்காவது கடற்கோள், காவிரிப்பூம்பட்டினம் என்கிற பூம்புகாரை தன்னுள் சுருட்டிக்கொண்டது. ஏதென்ஸ், ரோமாபுரி போன்ற ஐரோப்பிய கண்டத்தின் பழம்பெருமைமிக்க நகரங்களுக்கு இணையாக கட்டமைப்பிலும் வணிகத்திலும் சிறந்து விளங்கிய துறைமுக நகரம் பூம்புகார். சோழர்களின் ஆட்சிச்சிறப்புக்கு எடுத்துக்காட்டாக விளங்கிய அந் நகரத்தைப் பற்றி சிலப்பதிகாரம், பட்டினப்பாலை, மணி மேகலை ஆகிய நூல்கள் விவரித்துக் கூறுகின்றன. பட்டினப்பாக்கம், மரூவூர்ப்பாக்கம் என இரு பிரிவுகளைக் கொண்ட நகரத்தில் சீராக அமைக்கப்பட்ட தெருக்கள், உயர்ந்து நிற்கும் கட்டிடங்கள், பசுமையான வயல் வெளிகள், மீன்கள் துள்ளிக் குதிக்கும் நீர்நிலைகள், பல வகையான தொழில் செய்யும் மனிதர்கள், வரிசையாகக் கடைகளைக் கொண்ட நாளங்காடிகள், இரவில் திறந்திருக்கும் அல்லங்காடிகள் என பூம்புகார் நகரத்தின் எழிலை விளக்கும் பட்டினப்பாலை- அந்த எழிலை கடற் கரையில் கொண்டுபோய் நிறுத்துகிறது. கிரேக்கத் திலிருந்தும் ரோமாபுரியிலிருந்தும் வருகைதரும் வணிகர்களோடு கடல்வாணிபம் நடத்தும் சிறப்பைப் பெற்றிருந்திருக்கிறது அன்றைய பூம்புகார்.
நான்காம் கடற்கோளில் பூம்புகார் நகரத்தை கடல்கொண்டதை கிரகாம் குக் என்ற ஆய்வாளர் வீடியோ படமாகவே எடுத்திருக்கிறார். மொழி ஆர்வலர்கள், வரலாற்று ஆய்வாளர்கள் முன்னிலையில் இப்படம் திரையிட்டுக் காட்டப்பட்டுள்ளது.
கடலால் விழுங்கப் பட்ட தமிழகத்தின் பூம்புகாரும், குஜராத்தின் காம்பேவும் ஹரப்பா- மொகஞ்ச தாரோ நாகரிகத்திற்கும் முற்பட்டவை என்பதை கடலுக்கடியில் சென்று எடுக்கப்பட்ட அந்த வீடியோ படங்கள் நிரூபிக்கின்றன. மீனவர்களின் உதவியுடன் இந்திய நிலவியல் வல்லுநர்களால் படம் எடுக்கப் பட்டிருக்கிறது.
தமிழர்களின் நாகரிக சிறப்பின் அடையாளமாக விளங்கிய பூம்புகாரை மறுகட்டமைப்பு செய்யும் விதத்தில், தமிழக முதல்வர் கலைஞர் மு.கருணாநிதி அவர்கள் 1973-ல் தற்போதைய பூம்புகாரில் பழந்தமிழர் நாகரிகத்தையும், பண்பாட்டை யும் விளக்கும் நினைவுச் சின்னங்களை உரு வாக்கினார். எழு நிலை மாடம், நெடுங்கல் மன்றம், மகர தோரணவாயில், இலஞ்சி மன்றம், கொற்றப்பந்தல், பாவை மன்றம் என இலக்கி யங்கள் காட்டும் பூம்புகாரை சிற்பி கணபதி ஸ்தபதியின் துணையுடன் அமைத்தார். பண்பாட்டு- நாகரிகச் சின்னமாக பூம்புகார் கலைக் கூடம் விளங்குகிறது. முதல்வர் கலைஞரின் பெருமுயற்சி, இன்றைய தலை முறையினருக்கு ஈராயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட தமிழரின் நாகரிகத்தைப் புரிய வைக்கிறது. அதேவேளையில், கடலில் மூழ்கிய பூம்புகார் குறித்து மேலும் பல கடலாய்வுகள் மேற்கொள்ளப்பட்டால்; மேலும் பல வரலாற்று உண்மைகளைக் கண்டறிய முடியும்.
கடல் கொண்ட நிலப்பகுதிகளால் தமிழகம் இழந்தவை ஏராளம்.
1964-ஆம் ஆண்டு டிசம்பர் 23-ஆம் நாளன்று வீசிய புயலின்போது, ராமநாதபுரம் மாவட்டத்தின் கடலோர எல்லையான தனுஷ் கோடியை ஒரு பேரலை தாக்கியது. அதிகால 3 மணியளவில் 20 அடி உயரத்துக்கு எழுந்த ராட்சத அலையால் ராமேஸ் வரம் தீவின் கிழக்கு முனையில் இருந்த தனுஷ்கோடி என்ற 500 வீடுகளைக் கொண்ட அழகிய மீனவப் பகுதி முற்றிலுமாக அழிந்தது. இரண்டாயிரத்திற்கும் அதிகமான வர்கள் பலியாயினர். சென்னையிலிருந்து இலங்கைக்கு செல்பவர்கள் தனுஷ்கோடி வரை போட்மெயில் என்ற எக்ஸ்பிரஸ் ரயிலில் சென்று அங்கிருந்து கப்பல் மூலம் இலங்கைக்குச் செல்வது அன்றைய வழக்கம். அந்த போட்மெயில் எக்ஸ் பிரஸையும் கடலுக்குள் இழுத்துச் சென்று விட்டது, அந்த ஆழிப்பேரலை. கடல் கொண்ட தனுஷ்கோடியில் இன்று எஞ்சியிருப்பது, சிதிலமடைந்த ஒருதேவாலயமும் சிலகட்டிடங் களும் மட்டுமே.
புத்தாயிரம் ஆண்டுக்குப் பிறகு, தமிழகம் கண்ட ஆழிப்பேரலையை அறிவோம். 26-12-2006-ல் இந்தோனேஷியாவின் ஜாவா தீவுகளில் தொடங்கி, அந்தமான்-நிகோபர் தீவுகளின் இந்திரா முனை வழியாக தமிழகக் கடற்கரையைத் தாக்கிய அந்த ஆழிப்பேரலையால் தமிழகத்தின் 1000 கி.மீ. நீள கடலோரப்பகுதிகளில் பெரும்பாலானவை பெரும் பாதிப்புக்குள்ளாயின. ராமேஸ்வரம், திருச்செந்தூரைத் தவிர மற்ற கடலோரப் பகுதிகளில் பெரும் உயிரிழப்பும் பொருட்சேதமும் ஏற்பட்டன. பல மீனவ கிராமங்கள் மனிதர்கள் வாழ்ந்ததற்கானச் சுவடுகளற்றுப் போயின. தமிழகத்தின் கடல் எல்லைகள் இயற்கையின் கரங்களால் திருத்தியமைக்கப்பட்டன.
இப்படித் திருத்தியமைக்கப்படுவது நெடுங்கால மாகத் தொடர்ந்துகொண்டிருக்கிறது. சில பகுதிகள் கடலுக்குள் சென்றதுபோல, சில பகுதிகள் கடலிலிருந்து வெகுதூரம் சென்றிருப் பதையும் ஆய்வாளர்கள் சுட்டிக்காட்டுகின்றனர். சென்னை கடற்கரையின் மணற்பகுதி கடந்த 50 ஆண்டுகளில் வளர்ந்திருப்பதாக நிலவியல் வல்லுநர்கள் கூறுகின்றனர். முன்பு கடலோரமாக இருந்த சீர்காழி தற்போது கடற்பகுதியிலிருந்து பல கிலோமீட்டர் உள்ளடங்கியுள்ளது.
பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் உள்ள புவி அறிவியல் பள்ளியின் ஆய்வுகளில் பல புதிய தகவல்கள் கிடைத்துள்ளன. சென்னையிலிருந்து சத்தியவேடுவரை காணப்படும் கடலால் உரு வாக்கப்பட்ட மணல் திட்டுகளும், நேராகப் பாயும் பாலாற்றில் செங்கல்பட்டுக்கு அருகே காணப் படும் திடீர் வளைவும், கடலைச் சந்திக் காமல் திருவெண்ணைநல்லூர் அருகே புதையுறும் மலட்டாறும், வேதாரண்யத் திலிருந்து திருத்துறைப்பூண்டிவரை காணப்படும் மணல் திட்டுகளும், வைகை நதியில் காணப்படும் மூன்று கழிமுகங்களும் இங் கெல்லாம் ஒருகாலத்தில் கடல் இருந்தது என்பதைக் காட்டுவனவாக இருக்கின்றன என்கிறது, ஆய்வு முடிவு.
சுமார் 65ஆயிரம் ஆண்டுகளுக்குமுன் கடல் மட்டம் தாழ்ந்ததால் தமிழகமும், இலங்கையும் ஒரே நிலப்பரப்பாகச் சேர்ந்திருந்தன என்றும், சுமார் 27ஆயிரம் ஆண்டுகளுக்குமுன் கடல் மட்டம் உயர்ந்ததால் இலங்கையும், தமிழகமும் பிரிந்தன என்றும் கடலியல் ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கின்றனர். சுமார் 17ஆயிரம் ஆண்டு களுக்கு முன் இதேபோல கடல் மட்டும் தாழ்ந்தும், உயர்ந்தும் மாறுபாடுகளை உருவாக்கியதால் தமிழக-இலங்கை நிலப்பரப்பு சேர்ந்து-பிரிய வேண்டிய சூழல் மறுபடியும் ஏற்பட்டது, என்கின்றனர். இப்படி இலங்கையும் தமிழகமும் அடிக்கடி இணைந்து பிரிந்ததால் பாக் நீரிணைப் பகுதியில் கடலுக்கடியில் மணல்திட்டுகள் காணப்படுகின்றன. இராமர் இலங்கைக்குச் செல்ல, அனுமன் கட்டிய பாலம் என்று சொல்லப் படுவது இந்த மணல் திட்டுகளைத்தான்.
புவி அமைப்பியல் வல்லுநர்களின் கூற்றுப்படி, அண்டார்டிகா-க்ரீன்லாந்து-ஆசிய பகுதிகளில் உள்ள பனிப்பாறைகள் உருகி அதன்மூலம் கடல் உயர்ந்தால், தாழ்வான கடற்கரையைக் கொண்டி ருக்கும் தமிழகத்தின் கடலோரப் பகுதிகள் பல மூழ்கடிக்கப்படுமாம். இந்த எச்சரிக்கை, தமிழகத் தின் கடலோர வரைபடம்- இயற்கையின் கைகளால் மீண்டும் திருத்தியமைக்கப்படும் என்ற உண்மையைச் சுட்டிக்காட்டுகிறது.
ஒவ்வொரு கடற்கோளும் மண்ணோடு சேர்த்து பண்பாட்டு-வரலாற்று அடையாளங்களையும் கடலுக்குள் கொண்டு சென்றுவிடுவதால் தமிழகம் ஈடுசெய்ய முடியாத இழப்புக்குள்ளாகிறது. இயற்கையைச் சிதைக்காமல் வாழும் கலையையும் கடலுக்குள் புதையுண்ட நகரங்களை ஆய்வு செய்யும் பணியையும் கைக்கொண்டால், முன் தோன்றிய மூத்தகுடியின் அடையாளங்களைக் காப்பாற்றலாம்.
----அ.காமராஜ்.
No comments:
Post a Comment