
மாலை நேரம். ஜென் துறவி ஒருவர் தேநீரை ரசித்துக் குடித்துக்கொண்டிருந்தார்.
அப்போது அந்தப் பக்கமாக ஒரு வியாபாரி வந்தார். இவரைக் கவனிக்காமலேயே கடந்துசென்றார்.
சாமியார் அவரைக் கவனித்துவிட்டார். பக்கத்தில் அழைத்தார். ’என்னப்பா, இப்ப உன் முகத்துல தண்ணியைத் தெளிச்சா படபடன்னு வெடிக்கும்போலிருக்கே, என்ன விஷயம்? யார்மேல கோவம்?’
வந்தவர் பெரிதாகச் சலித்துக்கொண்டார். ’என்னத்த சொல்றது சாமி, புதுசா ஒரு தொழில் ஆரம்பிச்சேன். அது ஒண்ணும் சரிவரமாட்டேங்குது, கழுதைமாதிரி முன்னால போனா கடிக்குது. பின்னால போனா உதைக்குது. ஒரே டென்ஷன்.’
துறவி சிரித்தார். இரண்டே இரண்டு சொற்களை மட்டும் சொன்னார். ‘இதுவும் கடந்துபோகும்.’
வந்தவருக்கு என்ன விளங்கியதோ, துறவியிடம் விடைபெற்றுக்கொண்டு கிளம்பினார்.
சில வாரங்கள் கழித்து, அதேமாதிரி ஒரு மாலை நேரம், அதே துறவி அதே இடத்தில் உட்கார்ந்து தேநீர் அருந்திக்கொண்டிருந்தார். அதே வியாபாரி அவரை நோக்கி வந்தார்.
ஆனால் இப்போது அவர் முகத்தில் மட்டற்ற மகிழ்ச்சி. துறவி முன்னால் ஒரு தட்டு நிறைய பழங்களை வைத்தார். சாஷ்டாங்கமாக விழுந்து வணங்கினார். ’சாமி, நீங்க நிஜமாவே தீர்க்கதரிசிதான். உங்க அறிவுரைப்படி நான் அதே தொழில்ல தொடர்ந்து உழைப்பைக் கொட்டினேன். கைமேலே லாபம். இப்ப ஓஹோன்னு இருக்கேன்.’
துறவி சிரித்தார். அதே இரண்டு சொற்களைத் திரும்பச் சொன்னார். ‘இதுவும் கடந்துபோகும்.’
No comments:
Post a Comment